ஒரு சில நிழற்படங்களிலும்,காதி கிராமயோதியா பவன் ஷோக்கேசிலும்...
சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் சிலை போன்ற வடிவமாகவும்
சில ஓவியர்களின் கோடுகளாக மட்டுமே மரப்பாச்சிப்பொம்மைகள் காட்சி படிமங்களாக என் நினைவில் படிந்துள்ளது
அந்த பொம்மைகளின் கருமை நிறமும்,வடிவமும் என் கனவுகளில் அவ்வப்போது சூல்கொள்வதும் உண்டு....
நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மரப்பாச்சிப்பொம்மையின் நட்பு கிடைக்காமலேயே போய்விட்டது
"எனக்கு மரப்பாச்சிப்பொம்ம வாங்கி கொடுத்துருக்கியா அம்மா" என்று கேட்டதற்கு
தொலைந்து போன அவளின் மரப்பாச்சிப்பொம்மைப் பற்றி பேச தொடங்கிவிட்டாள் என் அம்மா
"அந்த பொம்மைங்க எல்லாம் எங்க காலத்திலியே இல்லாம போச்சு"-
என்ற அவளது பெருமூச்சில் பொம்மை கேட்டு அழுகும் ஒரு சிறு குழந்தையின் விசும்பலை என்னால் கேட்க முடிந்தது....
குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிட்டு உரசி நெற்றியில் தேய்ப்பார்களாம்..
ஆங்கிலத்தில் கூறப்படும் பல விதமான "healing therapy" களோடு இதை ஒப்பிடலாம் என்றே தோன்றுகிறது
கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே மரப்பாச்சிப்பொம்மைகளை பிரக்ஞையே இல்லாமல் ஒதுக்கியிருக்கிறது.
ஒரு மரப்பாச்சிப்பொம்மையை வாங்கி பிறந்தநாள் பரிசாக ஒரு குழந்தைக்காவது கொடுத்து விடவேண்டும் என்று திண்ணமாக முடிவெடுத்தேன்....
அப்படி ஒரு பிறந்த நாளுக்குகாக சில காலம் காத்திருக்க வேண்டியும் இருந்தது ......
அன்றும், வழக்கம் போல அவசரப் புறப்படலுக்கு இடையில் மரப்பாச்சிப்பொம்மையின் நினைவோடு காதி பவனுக்குச் சென்றேன் ஸ்டாக் இல்லையென்று சொன்னார்கள்
அவர்களிடமே எங்கே மரப்பாச்சிப்பொம்மைகள் கிடைக்கும் என்று விசாரித்து விட்டு ,
ஒரு கடைக்குச் சென்றேன் அங்கே மரப்பாச்சிப்பொம்மை ஒன்றை கண்டேன் சிறிது அளவு நான் அறிந்திருந்த மரப்பாச்சிப்பொம்மைகளோடு அது ஒத்தும் இருந்தது...
"இது பெரிசு விலை ரூபாய் 400" என்றார் கடைக்காரர்
கொஞ்சம் அதிர்வாக இருந்தது பையில் ரூபாய் 300 மட்டுமே இருந்தது, ஏதாவது ஒரு பொருளை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் ,அவசரம் வேறு.
பக்கத்தில் ஒரு பார்பி பொம்மை தனக்கே உரிய அலங்காரத்தோடு நின்றுகொண்டிருந்தது
கடைக்காரர் "சார் இந்தியன் பார்பி சார் 200 ரூபா தான் சார் "என்றார்.
வேறு வழி தெரியாமல் பார்பியை வாங்கி கனத்த மனதோடு பையில் அடைத்து கொண்டேன். மரப்பாச்சிப்பொம்மயை திரும்பி பார்க்க மனமில்லாமல் வெளியெறினேன்.
"என் புள்ளைங்கலயெல்லாம் காணமுன்னு பொம்மைங்கயெல்லாம் விசும்புதே".மிருகவிதூஷகம் நாடகத்தில் ச.முருகபூபதி அவர்கள் எழுதிய வசனம் என் நினைவில் ஏனோ வந்து போனது.....